BARALIKADU ECO TOURISM ( பரளிகாடு - இன்ப ( திகில் ) சுற்றுலா )


 பரளிகாடு

இன்ப ( திகில் ) சுற்றுலா


நாம் அனைவரும் குடும்பமாக பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்துள்ளோம். ஆனால் நிறைவு. சற்று குறைவே. மீண்டும் மீண்டும் தேடல்களாகவே உள்ளது. அவ்வாறு உள்ளவர்களுக்கு ஓர் இனிய செய்தி.

காடு சார்ந்த இடமாக இருக்க வேண்டும்.

நீர் நிலைகள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.

நல்ல உணவு வேண்டும்.

குழந்தைகள் விளையாட இடம் வேண்டும்.

மேலும் ஆற்றில் குளித்து மகிழ வேண்டும்.

இவை அனைத்தும் ஒரே இடத்தில் வேண்டுமா. வாங்க போகலாம் பரளிகாடு.




  கோவை மேட்டுபாளையம் அருகே அமைந்துள்ள பரளி என்கிற பகுதியில் அமைந்துள்ள வன பகுதி தான் பரளிகாடு. காரமடை வன சரகத்திற்கு உட்பட்ட இயற்கையான வனப்பகுதி அது. வன அலுவலகர் அனுமதி பெறாமல் யாரும் அங்கு செல்ல முடியாது.

பரளிகாடு –

சேலத்தில் இருந்து செல்பவர்கள்
அவினாசி, அன்னூர், காரமடை வழியாக அல்லது
பவானி, கோபி, சத்தி, பன்னாரி, காரமடை வழியாக சென்று அடையலாம்.

கோவையில் இருந்து செல்பவர்கள்
சின்னதடாகம், ஆனைகட்டி வழியாக அல்லது
சரவணம்பட்டி, காரமடை வழியாக சென்று அடையலாம்.


சரி. வன அலுவலரின் அனுமதியும் வாங்கி விட்டது.
விடியற்காலை 5.௦௦ மணிக்கே காரமடை வந்தாகிவிட்டது.

என்ன செய்யலாம் ?.

பரளிகாடு செல்லும் முன் ஒரு ஆன்மீக சுற்றுலா.

  காரமடையில் இருந்து சிறுமுகை வழியாக  சுமார் 7 KM பயணம் செய்தால் ஜடயம்பாளயம் என்ற இடத்தில் தென்திருப்பதி உள்ளது.       ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் ( K.G.DENIM FACTORY )  உரிமையாளர் தனது ஆலைக்குள் கட்டியுள்ள பாலாஜி கோவில் தான் அது. சிறிய திருப்பதி போன்றே உள்ளது.
காலை 6.௦௦ மணிக்கு தினமும் சுப்ரபாத தரிசனம் உள்ளது. அந்த திருத்தலத்தில் வெங்கடாசலபதியை தரிசனம் செய்த பின்னர் வெளியே வந்தால் அங்கு பிரசாதம் தருகிறார்கள். திருப்பதியை போன்றே லட்டும் கிடைகிறது. சுவையாகவும் இருக்கிறது. தரிசனம் முடிந்து பிரசாதம் சாப்பிட்டு வெளியே வந்தால் மணி 7.00 ஆகும். பின்னர் மீண்டும் வந்த வழியே காரமடை வரவேண்டும்.

  காரமடையில் இருந்து அத்திகடவு செல்லும் வழி என்று கேட்டு திரும்பினால் ஒரு ரயில்வே கிராசிங் வரும். அங்கிருந்து சுமார் 6 KM பயணம் செய்தால் மருதூர் என்கிற ஊர் வரும். அங்கு ஹோட்டல் உள்ளது. 5 ஸ்டார் 3 ஸ்டார் ஹோட்டல் இல்லை. அதை விட சுவை மிகுந்த டீ கடை ஹோட்டல்.

  அங்கு உணவு உண்டு பசியாறியதும் மீண்டும் 6 km பயணம் செய்தால் தாயனுர் என்ற ஊரின் சற்று முன் வலது புறமாக கெம்மராம்பாளையம் செல்லும் ரோடு பிரியும். அந்த வழியே ஒரு 6 KM சென்றால் வனத்துறையின் முதல் நிலை செக்போஸ்ட் வரும்.
அங்கு வன ஊழியர் நமது வாகன எண் பதிவு செய்துக் கொண்டு நமது அனுமதி சான்றை பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிப்பார்.
  பின்னர் அங்கிருந்து ஒரு 6KM  சென்றால் அத்திக்கடவு ஊர் வரும். அங்கு வரும் பாலம் கடந்தால் இரண்டாம் நிலை செக் போஸ்ட் வரும்.
அந்த செக்போஸ்ட் வரும் வரை எந்த ரோட்டிலும் பிரிய வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள். ( GPS போட்டுக்கொண்டு சென்றால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. )

  இந்த செக்போஸ்டில் செக்கிங் முடிந்தவுடன் சுமார் 6 KM  சென்றால் குந்தா, பரளி பிரிவு வரும். நேராக சென்றால் குந்தா வழி. அதில் செல்லாமல் வலது புறம் பரளி செல்லும் வழியில் திரும்பி சுமார் 9 KM சென்றால்

பில்லூர் அணை மின் நிலையம் மற்றும் பூச்சிமரத்தூர் பிரிவு ரோடு வரும். அந்த பிரிவு வழியில் வலதுபுறம் சென்றால் பரளிகாடு நெல்லிதுறை படகு இல்லம் வரும். இதுவே நாம் சென்றடையும் இடம் ஆகும்.




 இங்கு காலை 10.00  மணிக்குள் வந்து விட வேண்டும். ரோடு பல இடங்களில் மிகவும் மோசம் என்பதால் காரமடையில் காலை 8.00  மணிக்கே புறப்படுவது நல்லது.



காரமடையில் இருந்து பரளிகாடு 45 KM  தூரம் தான் என்றாலும் நல்ல கண்டிஷன் உள்ள காரில் பயணம் செய்தால்  2 மணி நேரம் ஆகும். மேலும் யானைகள் உலா வரும் ரோடு கூட அது. இரண்டு மூன்று வாகனங்கள் சேர்ந்து செல்வது நல்லது.

  படகு இல்லம் சென்றடைந்தததும் அதுவரை இருந்த பயம் படபடப்பு விலகி ஒரு மகிழ்ச்சி வருகிறது. முதலில் சுக்கு காபி தருகிறார்கள்.


அங்குள்ள 2 ஆலமரங்களில் கட்டியுள்ள மிக நீண்ட உஞ்சல் நம்மை வியக்க வைக்கிறது. குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் அந்த ஊஞ்சலில் விளையாடி மகிழ்கின்றனர்.




  சற்று நேரம் கழித்து கார்ட் ஒருவர் வந்து நம்மை வரவேற்பார். அவரிடம் சென்று நபர் 1 க்கு ரூபாய். ஐநூறு மட்டும் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். பின்னர் படகு ஓட்டுபவர்கள் லைப் ஜாக்கெட்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதை நாம் அணிந்துக்கொண்டு படகுக்கு 4 நபர்கள் வீதம் வட்ட வடிவ பைபர் படகுகளில் ஏறி சவாரி செய்யலாம்.




  பில்லூர் டேம் நீர் தேக்கம் அது. சுமார் ½ மணி நேரம் படகு சவாரி செய்தால் அணையின் ஒரு கரையில் இறக்கி விடுகின்றனர். அங்கு இறங்கி சற்று நேரம் இருக்கலாம். போட்டோ விரும்பிகள் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். சுமார் ½ மணி நேரம் கழித்து மீண்டும் ½ மணி நேரம் படகு சவாரி. வரும் வழியில் பில்லூர் அணை, ஹம்பல் பறவைகள், கரையில் உள்ள உடும்பு, யானைகள் வரும் வழி மற்றும் பூச்சிமரத்தூர் கெஸ்ட் ஹவுஸ் அனைத்தும் பார்த்துகொண்டு படகு இல்லத்திற்கு கொண்டு வந்து விடுகிறார்கள். 










  படகு இல்லத்தை அடைந்ததும் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தால் உணவு தயாராக உள்ளது. களி உருண்டை, பச்சிடி, வெஜிடபுள் பிரியாணி, குருமா, கேசரி, தயிர்சாதம் இவைகளுடன் அசைவ பிரியர்களுக்கு நாட்டுகோழி கறியுடன் குழம்பு, சப்பாத்தி மற்றும் வாழைப்பழம் இவை அனைத்தும் பரிமாறப்படுகிறது.





  உணவு உண்ட சிறிது நேரத்தில் புறப்பட தயாராக இருக்க வேண்டும் ஆற்றுக் குளியல் செய்ய. மீண்டும் வந்த வழியே 14 km பயணம் செய்தால் வரும் இரண்டாம் நிலை செக்போஸ்ட் தாண்டியவுடன் வலதுபுறம் பன்னாரி மாரியம்மன் கோவில் வரும். அங்கிருந்து  இடதுபுறம் திரும்பி ஒரு 2 km பயணம் சென்று சற்று தூரம் நடந்தால் அத்திக்கடவு ஆறு வரும். ஆற்றில் உற்சாக குளியல் போடலாம். துணைக்கு 2 பேர் கார்ட்களாக வருகிறார்கள். போகும் வழியில் ரோட்டில் உள்ள யானை சாணத்தை பார்த்தால் தான் நமக்கு பகீர் என்கிறது.

  படகு பயணம், சுக்கு காபி, மதிய உணவு இவை அனைத்தும் சேர்த்து பெரியவர்களுக்கு ரூபாய். 500.00  ம், 10 வயது உட்பட்டவர்களுக்கு ரூபாய். 400.00 ம் கட்டணமாக வசூல் செய்கிறார்கள். 

  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வனத்துறை அனுமதிப்பதால் ஒரு மாதம் முன்னரே அனுமதி வாங்குவது நல்லது.  

புக்கிங் செய்ய 90470-51011  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

  ஆற்றுக் குளியல் போட்டு மீண்டும் வந்த வழியே பயணம் செய்தால் காரமடை வந்து சேர்வோம். ஒரு தேநீர் அருந்தி விட்டு அங்குள்ள ரங்கநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பலாம்.

  என் பெயர் சிவகுமார். சேலம்.





மேற்கூறிய அனைத்தும் 14/08/2017 அன்று

 நான் குடும்பமாக பரளிகாடு சென்று வந்த சொந்த அனுபவமே. அன்றைய

 நாள் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் சென்றது. நன்றி.   

Comments